மலரின் மௌனம் (பாகம்-3)
அப்போது அவளுக்கு என்ன தான் தெரியும்?
பாவம்… அவளுக்கு நான்கு வயது.
அவள் தம்பி அகமதுவுக்கு இரண்டரை வயது.
என்னவாம்?
வீட்டில் எல்லோரும் இப்படி அலறி அழுகிறார்கள் இந்த நள்ளிரவில்…
நித்திரையில் இருந்து திடுக்கிட்டு எழுந்து ஓடி வந்தாள் பாத்திமா.
வீடு முழுவதும் சலசலப்பு.
பக்கத்து வீட்டார், சொந்தக்காரர்கள் என பலர் கூட்டமாக நின்றிருந்தனர்.
அவர்களுக்கிடையில் இரண்டு பொலிஸ்காரர்களும்.
அவள் தம்பி அகமது பயந்து அழுதபடி ஓடி வந்தான்.
“உம்மா… உம்மா…” என்று தேடினான்.
வாசலோரம் ஒரு மூலையில் அமர்ந்திருந்த உம்மா,
தலையில் அடித்துக்கொண்டு
“எங்க போனிங்க… எங்க போனிங்க…”
என்று கதறி அழுதுகொண்டிருந்தாள்.
பாத்திமாவின் தந்தையின் ஒன்றுவிட்ட அக்கா நிசா மாமி,
அகமதுவை தூக்கி அணைத்தபடி,
“ஒன்றுமில்லை அகமது… நீ என் தோளில் படு…”
என்று முதுகைத் தட்டினாள்.
பாத்திமா…
என்ன நடக்கிறது என்று புரியாமல்,
பயத்தில் ஒரு ஓரமாக பதுங்கி நின்றாள்.
எதுவும் தெரியாமல் இருந்தாலும்,
அவள் கண்கள் மட்டும் கண்ணீரை சிந்தின.
எல்லோரும் இருந்தார்கள்…
ஆனால் வாப்பாவை மட்டும் காணவில்லை.
“வாப்பா எங்கே…?”
அவளது சிறிய கண்கள் கண்ணீரோடு தந்தையைத் தேடின.
அந்த நேரத்தில் வீடு முழுவதும் ஒலித்தது ஒரு ஒப்பாரிக் குரல்—
“ரசாக்… ரசாக்…
எங்கடா போனே…”
அது வேறு யாருமில்லை…
ரசாக்கின் தாயின் உயிர் கிழியும் அழுகை.
(இன்ஷா அல்லாஹ்)

கருத்துகள்
கருத்துரையிடுக