அக்கினி கிறுக்கல்கள்
அவளை
அக்கினி கிறுக்கல்கள்
கிறுக்கியே செல்கின்றன...
ஆணும்,பெண்ணும்
சரிநிகர் என்கிறது
சம உலகு,
இருப்பினும்...
பெண்
தொழிலதிபரே எனிலும்
வீட்டில்
வேலைக்காரி,
சமையல்காரி,
மாமியாருக்கு
(மறு)மகள்,
அவளை
அக்கினி கிறுக்கல்கள்
கிறுக்கியே செல்கின்றன...
தொழிலுலகில்
உடல் வெந்துண்டு
உள்ளம் நொந்துண்டு
வீட்டுக்குள்
ஓய்வெடுக்க விரைந்தாலும்
அவள்
இல்லாள்
இல்லையென்று சொல்லாள்
இயலாமையிலும்
இனியவை செய்வாள்...
அவளை
அக்கினி கிறுக்கல்கள்
கிறுக்கியே செல்கின்றன...
தொழிலிலும் சாதிப்பாள்
குடும்பத்தை சோதிப்பிலும்
உயர்த்துவாள்
வாழ்த்துக்களுக்கு
வாய்ப்பே இல்லை...,
சமையல் சுவையில்லை
உணவில் உப்பில்லையாம்,
பிள்ளை படிக்கவில்லை
அவள் பொறுப்பில்லையாம்,
செலவுகள் அதிகம்
அவளின் ஊதாரித்தனமாம்,
யாருக்கேனும் சுகயீனம்
அவளின் கவனயீனமாம்,,,
அவள்
உழைக்கவும் வேண்டும்
பிழைக்கவும் வேண்டுமாம்,,,
அவளை
அக்கினி கிறுக்கல்கள்
கிறுக்கியே செல்கின்றன...
முதலாளிகள்
உழைப்பை
சுரண்டி சூறையாடும் போது
கண்டும் காணாதிருந்தால்
உழைக்கத்தெரிந்தவள்...
கண்டு கிளர்ந்தெழுந்தால்
பிழைக்கத்தெரியாதவள் ...
பிறரை போட்டுக்கொடுத்தால்
பிரமோசன்...
நியாயம் பேசினால்
டென்சன்...
அவளை
அக்கினி கிறுக்கல்கள்
கிறுக்கியே செல்கின்றன...
சோதனையிலும்
வேதனையிலும்
சாதிப்பவள் அவள்..,
அவளை
அக்கினி கிறுக்கல்கள்
கிறுக்கியே செல்கின்றன...

கருத்துகள்
கருத்துரையிடுக