கல்லூரி நினைவுகள்

           கல்லூரி நினைவுகள்...
எங்கெங்கோ
பூத்தப்பூக்கள்
கல்லூரி மலையில்
கஸ்தூரி மலர்களாய்.

வரவேற்றது
கல்லூரி
கரமேற்ற நாம் 
கல்வியில்.

முதலாம் வருடத்தில்
முகம் தெரியா 
நாம்
முகவரிகளில்
அறிமுகமானோம்
அன்புள்ளங்களாய்.

காலநிலை புதிது
மனநிலை புதிது என
தன்னிலை மறந்தே
எமக்கானதோர்
புதிய சூழல்.

சீமாட்டிப் பிள்ளையும்
பாம்பாட்டிப் பிள்ளையும்
ஒரே நிலைதான்
புலப்படுத்தியது
நலமான விடுதி.

ஆரிய சோறு
பழஞ்சோறானாலும்
பட்டினிக்கு அது
பஞ்சாமிர்தம் ஆனது.

காலசூசிக்கு 
பழக்கமானது
கற்பதற்கு பாடங்கள்
மட்டுமல்ல
கல்லூரி வாழ்க்கையும்
தான்.

நாலுமணிக்கு
கண்விழிப்பு
நாலு நாலு பேர்
பாத்ரூமில் சந்திப்பு
என 
காலைக்கடன்கள்
வேலைப்பகிர்வாய்
முடிந்தன.

அதிகாலை 
வீட்டில் கட்டிலில்
அலுப்பு போக்கி
கொட்டாவி விட்ட
பொழுதில்,
கல்லூரி மண்ணில்
கொடியேற்றி
கீதம் இசைத்த
பொழுதுகள்.

மாச்சிங் செய்து
மறத்துப்போன
கால்கள்
ஓய்ந்துப்போகும்
போது
ஓடு ஓடு என
அதட்டலான
சீனியஸின் குரல்கள்.

சீனியஸ்கும்
ஜூனியஸ்கும்
இடையிலான
உறவுபாலம்
'சிஸ்டர்ஸ்' என்ற
வார்த்தை வழியில்.

உச்சி வெயில்
உச்சம் கொடுக்கும்
பகல்
பன்னிரெண்டு மணிக்கு
மைதான முற்றத்தை
கைகளாலே
கற்கள் பொருக்கி
களைத்துப் போக
செய்த நிலையும்,
காலைத்தொட்டு 
மாலைவரை
மரத்துக்
கனிகளை
கணித்துக்கூறும்
நிலையும்,
ஒத்துக் கேட்டும்
ஒளிந்துப்பார்த்தும்
எம் தவறைக்
கண்டு பிடித்து
கண்டித்த 
நிலையும்,
பகடிவதைகளாய் எம்மை
வதைத்தன
முதலாம் வருட
முதலில்.

வெள்ளை
சேலையில்
சோலைப்பூக்களாய்
வகுப்பறைகளில் நாமும்,
புதுப்புது
லெக்சரசும்,
புதிய புதிய
பாட அறிமுகங்களும்.

கண்டிப்பான
பாட வேளைகளும்
காலஞ்செல்ல செல்ல
அரட்டைகளும்,அட்டகாசங்களுமாய்
மாறும்.

ஐந்து ரூபாயில்
ஐந்தே நிமிட
வீட்டாரின் விசாரிப்பில்
துண்டிக்கும்
தொலைபேசி
அலைப்பும்
அழுதுக்கொண்டே
விடுதி நோக்கிய
நகர்வும்
ஆரம்பத்தில்,
அதை தாண்டிய
பின்னர்,
களவில்
தலையணைக்கடியில்
கைபேசி
காதோடு
கதை பேசும்...
அதில்
காதலனுடனும்
சில பொழுது
கழியும்.

கல்வியாண்டில்
கலக்கலான 
சுற்றுலாவில்
நாடுமுழுதும்
ஆங்காங்கே
அசத்தலான பிரவேசம்
நண்பர் கூட்டம்
சந்தோச ஆட்டம்
பஸ்ஸிலே
என
கழிந்தது
மூன்று நாட்கள்.

வித விதமான
புகைபடங்களும்,
விடுதிக்குள்
பிறந்த நாள்
கொண்டாட்டங்களும்.

கள்ளத்தனமாய்
கல்லூரி மரமேறி
காய்பறித்தப்
பொழுதுகளும்,
சின்ன சின்ன
சண்டைகளும்,
சில்மிச சிரிப்புகளும்,
கொஞ்சி பேசி
கோபித்துக் கொள்ளும்
பொழுதுகளும்,
சிறுசிறு 
விடுமுறைகளில்
சினேகிதர் 
வீட்டுப்பயணங்களும்,
ஒருவர்
துயரில்
அனைவரின்
கண்ணீர் துளிகளும்,

இவ்வாறே
இருவருட
ஈற்றில்

'மனசே மனசே
மனசில் பாரம்
நண்பர் கூட்டம்
பிரியும் வேளை'
என்ற பாடலுடனான
பிரியாவிடையும்,

கல்லூரி
கால நினைவுகள்
ஆட்டோகிராபில்
பேனா போட்ட
கோலங்களாய்....

முகங்களின்
பதிவுகள்
குரூப்போட்டோவில்
முத்தான 
நினைவுகளாய்...
     
       கல்லூரி நண்பிகளுக்காய்
         உங்கள்
        அப்புத்தளை 
    பனி மூட்டத்தில்









கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

உன்னை காதலிக்கிறேன்...

காதல்